வியாழன், 31 மார்ச், 2016

‘நாய்பாட்டு சொல்லிக்கொடு!’



எமக்குத்தொழில் அசைபோடுதல் 5





ங்களை போட்டோ எடுக்கக் கூட்டிக்கொண்டு போகும் பங்களா மிகப்பெரியது. வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே வீடு இருப்பதே தெரியாது. எப்போதும் பெரிய இரும்புக் கதவுகள் மூடியே இருக்கும். உள்ளே போனாலும் முதலில் பெரிய போர்டிகோ. போர்டிகோவின் நடுவில் ஒரு நீரூற்று. வெள்ளைவெளேரென்று பூமாதிரி விரிந்திருக்கும் அதிலிருந்து நீர் பூச்சிதறலாக வெளி வந்து கொண்டிருக்கும். நீரூற்றைச் சுற்றி குட்டைகுட்டையான செடிகள் – அழகாக கத்தரித்து விடப்பட்டிருக்கும்.  நாங்க ஒருமுறை உள்ளே போட்டோ எடுப்பதற்காக நின்றிருந்தபோது ஒரு கார் (கப்பல் மாதிரி) உள்ளே வந்தது. நீரூற்றை ஒரு பெரிய சுற்று சுற்றி உள்ளே போய் நின்றது. விரிந்த கண்களுடன் நாங்கள் எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். இன்றைக்கும் எனக்கு புத்தகங்களில் பெரிய பங்களா என்று படிக்கும்போது இந்த வீடுதான் நினைவிற்கு வரும். 


நாகப்பையர் தெருவில் நிறைய விஷயங்கள் நடந்தது நினைவில் இருக்கிறது. தொம்மங்கூத்தாடிகள் என்று அழைக்கப்பட்ட கழைக்கூத்தாடிகள் தெருவில்  வருவார்கள். இரண்டு கம்பங்களை நட்டு, இரண்டுக்கும் இடையில் இன்னொரு கம்பு கட்டி அதில் தூளியில் தூங்கும் குழந்தையை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் வானைத் தொடும் அளவிற்கு வீசி வீசி ஆட்டுவார்கள். நான் அதைப் பார்க்கவே பயப்படுவேன். அந்தக் குழந்தைக்கு எப்படி இருக்குமோ? சின்ன பெண் ஒருத்தி மெல்லிசு கம்பியின் மேல் கையில் ஒரு மூங்கில் கழியை வைத்துக் கொண்டு அந்தரத்தில் நடப்பாள். கூத்தாடி தன்னுடன் வரும் பெண்ணை (அவனது மனைவியாக இருக்கலாம்) கூடையைப் போட்டு மூடிவிட்டு, ‘எங்க அந்தப் பொண்ணு, இங்க இருக்காளா? அங்க இருக்காளா, உங்க வீட்டுக்குள்ள இருக்காளா, எந்த வீட்டுக்குள்ள இருக்கா?  இந்தக் கூடைக்குள்ள இருக்காளா?’ என்றெல்லாம் கேட்டுவிட்டு கூடையை திறந்தவுடன் அந்தப் பெண் மாயமாகி இருப்பாள். சற்று நேரம் கழித்து எங்கள் தெருமுனையிலிருந்து அந்தப் பெண் நடந்து வருவாள். எப்படி அது சாத்தியம் என்று இன்றுவரை எனக்குப் புதிர்தான்.


ருடா வருடம் நவராத்திரி கொலு வைப்போம். வீட்டில் இருக்கும் பெட்டிகளை எல்லாம் அடுக்கி அப்பா படிகள் கட்டுவார். அதைப்பார்ப்பதே சுவாரஸ்யம் தான். படிகள் என்றே சொல்லமுடியாது. பெட்டி பெட்டியாகத் தெரியும். ‘இது சின்ன பெட்டிப்பா.... இது பெரிய பெட்டி...இது மேல அதை வைக்கலாம்’ என்று நாங்கள் சுற்றி நின்று அப்பாவிற்கு யோசனை சொல்வோம். அப்பா நாங்கள் சொல்வதை காதில் வாங்கியபடியே படிகள் கட்டுவதில் மும்முரமாக இருப்பார். பெட்டிகளை அடுக்கி முடிந்தபின் அதன் மேல் வெள்ளை வேட்டியை விரித்து அது பறக்காமல் இருக்க இரண்டு பக்கமும் செருகி விட்டு கீழே போட்டிருக்கும் பெட்டிகள் தெரியாமல் இருக்க இன்னொரு வேட்டியைப் போட்டு அதையும் நன்றாக சுருக்கம் இல்லாமல் நீவிவிட்டு, எல்லா பக்கமும் செருகி ஷ்............அப்பாடா என்றிருக்கும் எங்களுக்கு. பாவம், அப்பா, எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று தோன்றும். வீட்டில் இருக்கும் பொம்மைகளை அடுக்க ஆரம்பிப்போம். முதலில் ‘லக்ஷ்மி கல்யாண வைபோகமே’ பாடிக் கொண்டே சோபனம் (ஒரு கிண்ணத்தில் அரிசி, பருப்பு, வெல்லம் எல்லாம் போட்டு) வைப்பாள் அம்மா. அதுவரை நாங்கள் பொறுமை காப்போம். அப்புறம் எங்கள் ராஜ்ஜியம் தான். 

‘இந்த பொம்மைய அங்க வை...!’
‘போடி! இது எனக்குப் பிடிச்ச பொம்மை. முதல் படிலதான் வைப்பேன்!’
நானும் என் தம்பியும் சண்டை போட்டுக் கொண்டே அடுக்குவோம்.
அம்மாவின் குரல் ஒலிக்கும்: ’எங்க ரெண்டுபேரும் தசாவதார பொம்மைகளை சரியா அடுக்குங்கோ பார்க்கலாம்...!’


ருவரும் கப்சிப். மனதிற்குள் ‘மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன....’ என்று சொல்லிப் பார்த்துக் கொள்வோம். பரசுராமனுக்கும், பலராமனுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது? பரசுராமன் தாடி வைத்திருப்பார். பலராமன் கையில் கலப்பை இருக்கும் – இப்படி நாங்களாகவே கண்டுபிடித்து வைப்போம். பத்து நாட்களும் எல்லார் வீட்டிற்கும் போய் அழைத்துவிட்டு வருவோம். அவரவர் வீட்டில் கொலு இருப்பதால் எப்போது முடிகிறதோ அப்போது அடுத்தவர் வீட்டிற்குப் போய் வருவார்கள். சுண்டல் கலெக்ஷன் முடிந்து வீட்டிற்குத் திரும்பி எல்லா சுண்டல்களையும் ஒன்றாகப் போட்டு அன்றைக்கு இரவு தொட்டுக் கொள்ள ஒரு மிக்ஸ்ட் சுண்டல் கிடைக்கும்!


சில வருடங்களுக்குப் பின் நாகப்பையர் தெருவிலேயே வேறு ஒரு வீட்டிற்கு குடித்தனம் வந்தோம். அது இன்னும் விசித்திரமான வீடு. சமையலறை மட்டும் கீழே. படுக்கையறை (அதே 5 படுக்கை-அறை!) மாடியில். பக்கத்துப் போர்ஷனிலேயே வீட்டுக்காரம்மாவும் அவர்கள் குடும்பமும் இருந்தது. அவர்களுக்கும் மாடியில் ஒரு அறை. அப்போதெல்லாம் அம்மா நிறைய பாரதியார் பாடல்கள் பாடுவாள். அப்போது அம்மாவிற்கு பிடித்த பாட்டு ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா! மாடியில் அந்த இரண்டு அறைகளைத் தவிர கொஞ்சம் திறந்த வெளியும் இருக்கும். அப்பா அலுவலகத்திலிருந்து திரும்ப தாமதமாகும். அப்பா வரும்வரை நாங்கள் அந்த அறைக்கு வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம். அப்போது அம்மா மெல்லிய குரலில் இந்தப் பாட்டைப் பாடுவாள். வீட்டுக்காரம்மாவிற்கு ராணி என்று ஒரு பெண். நாங்கள் எல்லாம் சமவயதினர். 


ரு நாள் ராணி வந்து என்னிடம் ‘உங்கம்மா தினமும் நாய்’ ‘நாய்என்று பாடுகிறாளே, அந்த பாட்டை எனக்கும் சொல்லிக் கொடேன்என்றாள். ஒரு நிமிடம் திகைத்த நான் என் அம்மாவிடம் ஓடிப் போய் சொன்னேன். அம்மா! ராணிக்கு நாய் பாட்டு கத்துக்கணுமாம்!எல்லோருக்கும் விவரம் புரிந்து அன்றைக்கு நாங்கள் சிரித்த சிரிப்பு! இன்றைக்கும் சிரிப்புடனேயே இதை எழுதுகிறேன்.



அசைபோடுதல் தொடரும்.......


அதீதம் இணையஇதழில்வெளிவந்துகொண்டிருக்கும்தொடர்   

புதன், 30 மார்ச், 2016

அனுமார் சந்நிதி கிணறு!



எமக்குத் தொழில் அசைபோடுதல் 4
 




திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில நாங்க இருந்த நாகப்பையர் தெருவுல அப்பாவோட நண்பர்கள் இருவர் இருந்தனர். ஒருவர் ரங்கநாதன் மாமா. அவரது மனைவி பத்மா மாமி. மாமா பளிச்னு  திருமண் இட்டுக்கொண்டு தினமும் பார்த்தசாரதியை சேவித்துவிட்டு வருவார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் ஒரு பெண். எங்களை விட இவர்கள் பெரியவர்கள். இன்னும் கூட ரங்கநாதன் மாமாவும் பத்மா மாமியும் திருவல்லிக்கேணியிலதான் இருக்கிறார்கள். பார்த்தசாரதியை  விட்டுட்டு போவாளோ? என்பார் மாமி. பிள்ளைகள், பெண் எல்லாம் கல்யாணம் ஆகி வேறு வேறு இடத்தில் இருந்தாலும் மாமாவும் மாமியும் பார்த்தசாரதியின் திருவடி நீழலை விட்டு வர மறுத்து விட்டு கோவிலுக்கு வெகு அருகில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வாசம். ‘தனியா இருக்கேளே’ என்றால், ‘தனி என்னடி தனி? பக்கத்துல பார்த்தசாரதியை வைச்சுண்டு அப்படி சொல்லக்கூடாது’ என்பார் மாமா. அப்பாவிற்குப் பின்னும் எங்கள் குழந்தைகள், பேரன்கள், பேத்திகள் என்று அன்றைய நட்பு இன்னும் தொடருகிறது. எங்கள் இல்லத் திருமணங்கள், மற்ற விசேஷங்கள் எல்லாவற்றிலும் மாமா, மாமியின் வருகை தப்பாது. இப்பவும் எப்போ திருவல்லிக்கேணி போனாலும் மாமாவோ, மாமியோ பார்த்தசாரதி சந்நிதியில் பெருமாளை சேவித்துக் கொண்டு இருப்பார்கள். எல்லோரையும் நினைவு வைத்துக் கொண்டு விசாரிப்பார்கள்.


இன்னொருவர் மோகன்ராம் மாமா. மாமி பெயர் சந்திரலேகா. உண்மையில் அந்த நிலாவைப் போல பளிச்சென்று இருப்பாள் மாமி. மோகன்ராம் மாமா நல்ல உயரமும் பருமனுமாக ஆஜானுபாகுவாக இருப்பார். (அம்மாவின் மொழியில், ‘அழிச்சா அஞ்சாள் பண்ணலாம்’) இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் என்று நினைவு. எப்போதாவது இவர்கள் இருவர் வீட்டிற்கும் அம்மாவுடன் போவோம். ரங்கநாதன் மாமா வீடு மாடியில் இருந்தது. இந்த மாமாவின் வீட்டிற்கு எதிரில், மோகன்ராம் மாமா இருந்தார். அது கீழ் போர்ஷன் தான். மோகன்ராம் மாமா எங்களுடன் எங்கள் வயதிற்குத் தகுந்தாற்போல பேசுவார். சந்திரா மாமியும் அப்படியே தான். 


ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது ஒரு டாக்சியில் மோகன்ராம் மாமா சென்று கொண்டிருந்தார். அவரது தலை டாக்சியின் ஜன்னலில் சாய்ந்திருந்தது. அன்றிரவே மாமாவும் உம்மாச்சியிடம் போய்ச்சேர்ந்து விட்டதாக செய்தி வந்தது. என் அம்மாவையும் அப்பாவையும் இந்த செய்தி மிகவும் உலுக்கிவிட்டது. மோகன்ராம் மாமா பாத்ரூமில் விழுந்து நொடியில் போய்விட்டார். எங்கள் அப்பாவைவிட சின்னவர். சந்திராவிற்கு இப்படி ஆகியிருக்க வேணாம்அப்படின்னு அம்மா பல நாட்கள் சொல்லிச் சொல்லி வருத்தப் படுவாள். சின்னவயது என்றாலும் என்னால் இன்னும் மறக்க முடியாத இரு இழப்புகள் சக்கு அக்கா, மோகன்ராம் மாமா. 


நாகப்பையர் தெருவில் இன்னொரு மறக்கமுடியாத இடம் எங்கள் பள்ளிக்கு பக்கத்தில் இருந்த அனுமார் சந்நிதி. சந்நிதியின் பின்புறம் ஒரு பெரிய அரசமரம். பண்டிகை, விசேஷம் தவிர மற்ற நாட்களிலும் இந்த அரச மரத்தை பிரதட்சணம் செய்யும் பெண்கள் கூட்டத்தில் எங்கள் வகுப்புத் தோழர்களின் அம்மாக்களும் அடங்குவர். நான் படித்த  இரண்டாம் வகுப்பு அறையிலிருந்து இந்த அரச மரம் நன்றாகத் தெரியும்.  ல அம்மாக்கள் அரச மரத்தடியிலிருந்தபடியே எங்க வகுப்பு ஆசிரியையைப் பார்த்து ‘பாப்பா நல்லா படிக்கிறாளா?’ ன்னு கேப்பாங்க. இன்னும் சில அம்மாக்கள் அரச மரத்தடியிலிருந்தே எங்க வகுப்பு ஆசிரியையை எட்டிப் பார்த்து, ‘புள்ளைக்கு ஒடம்புக்கு முடியல; அதான் இன்னிக்கு இஸ்கோலுக்கு வரல’ ன்னு ரொம்ப சகஜமா (லீவு லெட்டர் எழுதிக் கொடுக்காமலே) சொல்லிட்டுப் போவாங்க. 


இந்த அனுமார் கோவிலின் பின்புறம் ஒரு கிணறு இருக்கும். அந்தக் கிணற்றைப் பற்றி நிறைய கதைகள் எங்கள் நடுவில் உலா வரும். அந்தக் கிணற்றுக்குள், கிணற்றுக்குள், கிணற்றுக்குள் பல பல கிணறுகள் இருக்கின்றன; மிக மிக ஆழமான அந்தக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டால் அவ்வளவுதான்! எலும்பு கூட கிடைக்காது என்றெல்லாம் பயங்கரக் கதைகள்! அதைக் கேட்டு பலரும் அவரவர் கற்பனைக்கேற்றபடி திரித்து திரித்து.......! பல இரவுகள் என்னைத் தூங்கவிடாமல் செய்தது இந்தக் கிணறு! சிலசமயம் எங்கள் அம்மா இந்தக் கோவிலுக்கு வருவாள். அந்தக் கிணறை பார்க்காமல் வர வேண்டுமே என்று எனக்கு ரொம்ப பயமாக இருக்கும்.


கனகவல்லி பள்ளியில் படித்தபோது ஒவ்வொரு வருடமும் எங்களை வகுப்புவாரியாகப் புகைப்படம் எடுப்பார்கள். எங்கள் பள்ளிக் கூடம் சிறியது அதனால் எங்கள் பள்ளியின் எதிரில் உள்ள ஒரு பெரிய பங்களாவிற்குப் போவோம். அங்கு வசித்தவர் பெயர் சுபத்ரா மன்னுலால். அப்போது அவர் ஏதோ அரசு பதவியில் பெரிய வேலையில் இருந்தார். நாங்கள் அவரைப் பார்த்ததேயில்லை. மிகப்பெரிய பங்களா. நாங்கள் எல்லோரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு வரிசையாக தெருவைக் கடந்து அந்த பங்களாவிற்குள் நுழைவோம். பெரிய கேட். நாங்கள் வருவதைப் பார்த்து அந்த கேட்டின் அருகில் நிற்கும் பாதுகாவலர் கேட்டைத் திறப்பார். எங்கள் பின்னாலேயே எங்கள் ஆசிரியை வருவார். நாங்கள் வருவதற்கு முன்பே மர பெஞ்சுகள் போடபட்டிருக்கும். உயரமாக இருந்தால் கடைசி பெஞ்சில்  நிற்க வேண்டும். நான் எப்பவுமே குள்ளம்! அதனால் கீழே உட்கார்ந்து கொள்வேன். சிலசமயம் முதல் வரிசையில் ஆசிரியை பக்கத்தில் அமரும் பாக்கியமும் கிடைக்கும். இந்த முறை சென்னை போயிருந்த போது அம்மாவிடம் இருந்த பழைய போட்டோ சேகரிப்பில் என் தம்பி இரண்டாவதோ மூன்றாவதோ படிக்கும்போது எடுத்த புகைப்படம் இருந்ததைப் பார்த்தேன். என்னுடையது இல்லை....கொஞ்சம் வருத்தம் தான். வருடாவருடம் எங்க புகைப்படங்களை அப்பா வாங்கிவிடுவார். நிறைய வீடுகள் மாறினதால எல்லாம் எங்க போச்சோ?


அசைபோடுதல் தொடரும்........

அதீதம் இணைய இதழில் வெளி வந்துகொண்டிருக்கும் தொடர்